புத்தளத்தில், 20 நாள் பச்சிளம் குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்தமை மற்றும் குழந்தையை பெற்றமை தொடர்பில்,25 வயது தாய் ஒருவரையும் மற்றொரு பெண் உள்ளிட்ட சிலரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பல்லம, மதுரங்குலியவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் குறித்த பச்சிளம் குழந்தை ஒப்படைக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக புத்தளம் குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான பணத்தை அப்பெண்ணின் கணவர் ஏற்பாடு செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
தானும் தனது துணைவரும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க இயலவில்லை என்றும் அக்குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
மேலும், அவரது துணைவருக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் குழந்தையை பணத்திற்கு பெற்ற பெண்ணுக்குத் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில், அவருக்குக் குழந்தைகள் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் சட்டப்பூர்வமான தத்தெடுப்பு நடைமுறையின்படி குழந்தை கொடுக்கப்பவில்லை என பொலிசார் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட இரு பெண்களும் ஏனையோரும் காவலில் எடுக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.







