எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மீட்டர்ருக்கான முதல் கி.மீ கட்டணத்தை 130 ரூபாவாக அதிகரிக்கும் முன்மொழிவை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் குழுவிடம் அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை கடந்த 2 திருத்தங்களில் மொத்தம் 36 ரூபா வரையில் அதிகரித்துள்ளதோடு லூப்ரிகண்டுகள், கிரீஸ், என்ஜின் ஒயில், உதிரி பாகங்கள் அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளன. இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிலை முன்னெடுப்பதில் போராடி வருகின்றனர் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் இந்தத் துறை “கடுமையான சிரமங்களை” சந்திக்க நேரிடும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களின் கீழ் சிறு போக்குவரத்து நடத்துனர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எல். ரோஹன பெரேரா வலியுறுத்தியுள்ளார்.








