தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான பொலிஸார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திரேஸ்புரம் கடற்கரையின் வடக்கு பகுதியில் படகு பழுது சரி பார்க்கும் இடத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்துள்ளனர்.

குறித்த சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

சோதனைக்குப் பின் அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆரோக்கிய ஜான்சன் என்பரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான பைபர் படகில் கடத்தலில் ஈடுபட்டவர்கள், மீதி இருந்த பீடி இலை மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி தப்பிச் சென்ற நபரை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here