உள்ளூராட்சி மன்ற சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே நேற்றைய தினம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பையடுத்து, குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அதிகாரத்தை முதல் இரு வருடங்கள் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு வருடங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வழங்கும் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








