நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, சிறைச்சாலை நுழைவாயில் ஊடாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்தகுமார விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் உட்புற இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு, வெளிப்புற மரக்கதவை நோக்கி முன்னேறியுள்ளனர். அந்த பகுதியில் சிறைச்சாலையின் ஸ்கேனர்கள் மற்றும் முக்கியத் தொடர்பாடல் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியை கைதிகள் கைப்பற்றியிருந்தால், பாரிய சேதம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும். அதனைத் தடுப்பதற்காகவே குறித்த அதிகாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
வைரலாகப் பரவி வரும் சமூக ஊடகக் காணொளியில் சம்பவத்தின் இறுதி நிமிடங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
அதற்கு முன்னதாக, வன்முறையைக் கட்டுப்படுத்த உள்ளே சென்ற சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகளால் சூழப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காகவும், நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவுமே குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பதில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.






