ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு நபரின் பெயரில் கடவுச்சீட்டைப் போலியாகத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவின் பிரதி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இந்த மோசடியான ஆவணங்களைத் தயாரிக்க உதவியமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







