மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (24.10.2024) நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தற்போது மழை காலம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்குரிய நிலை ஏற்படும் எனவே மக்கள் டெங்கு பரவுகின்ற இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் நீர் நிரம்பிய குழிகளில் சிறுபிள்ளைகள் வீழ்ந்து உயிரிழக்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. எனவே பெற்றோர்கள் அவதானமாக குறித்த அனர்த்தங்களிலிருந்து தமது சிறுகுழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அவ்வாறான குழிகளை மூடவேண்டும்.
மழை காலங்களில் நீரில் மூழ்கி உயிரிழக்கின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மழை காலங்களில் நீர் நிலைகளில் நீர் அதிகரித்து காணப்படுகின்றது. நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும். இடி மின்னல் மற்றும் மின்சார தாக்கங்களிலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாப்பதோடு மழை காலங்களில் விஷயந்துக்கள் வீடுகளை நோக்கி வருவதனால் விஷயந்துக்களின் பாதிப்பிலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.








