வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த விடயத்தை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இப் போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி  எதிர்கால  இளைய தலைமுறைகளும் எம்மைப்போல் அவலநிலையை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையிலான கல்வி சீர்திருத்தை வலியுறுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சினை என்பது பட்டதாரிகளை மாத்திரமல்ல  அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் சமூகத்தையும் வாழ்வாதார மற்றும் பொருளாதார ரீதியாக வெகுவாக பாதித்துள்ளதுடன் எதிர்கால தலைமுறைகளையும் முழு சமுதாயத்தையும் மிக மோசமாக பாதிக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எனவே தற்போதைய தேர்தல்காலத்தில் எமக்கான பிரச்சினைகளை வெளிக்கொணர்வதன்மூலம்  ஏதேனும் ஒரு வகையிலான சாதகமான வாய்ப்பினை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

போராட்டங்கள் மூலம் மட்டுமே எங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை நிதர்சனமான உண்மை. எனவே இதனை உணர்ந்து அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும்  ஒன்றிணைந்து தொழில் உரிமைக்கான ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் – என்றுள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here