ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஏபிசி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
“இன்று, குறித்த கப்பலின் 22 பணியாளர்களைத் ஈரானுக்கு திருப்பி அனுப்புவதற்காக பாகிஸ்தானுக்கு மாற்றும் பணியை அமெரிக்கப் படைகள் நிறைவு செய்தன,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த மாதம் அமெரிக்கக் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முயன்றபோது இடைமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட தௌஸ்கா கப்பலின் பொறுப்பு, தற்போது அதன் உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை 6 பயணிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்டனர் எனவும் அவர்கள் கப்பல் பணியாளர்களின் குடும்பத்தினராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 20 – ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் கப்பலைக் கைப்பற்றின. ஈரான் இதை “கடற்கொள்ளை” என்றும் அமெரிக்கா தங்கள் கப்பலைத் திருடிவிட்டதாகவும் கூறியது.
அமெரிக்க-ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் இவ்வாறு அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட ஈரானின் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








