வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 14 சீன பிரஜைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைமறித்துள்ளனர்.
வணிகத்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள், இன்று (28) அதிகாலை 1:30 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பசுமை வழித்தட நுழைவாசலில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களின் உடமைகளை முழுமையாக சோதித்ததில், 14 பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 691 அட்டைப் பெட்டிகளில் (138,200) வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவை 20,730,000 (சுமார் 20 மில்லியன்) சந்தை மதிப்புள்ளவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சுங்க அதிகாரிகள் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.








