அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் சுற்றித்திரியும் இவ்வாறான கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள் உரிய தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளான பிரதேச செயலங்கள் , வைத்தியசாலைகள் , வங்கிகள் பொதுப் போக்குவரத்து பகுதிகளில் இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் சர்வ சாதாரணமாக திரிகின்றன.
வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளமையினால் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து சுதந்திரமாக திரிகின்றன.
எனவே , கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.
இதனால் இவ்வீதியில் பயணம் செய்யும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றன.








