யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது.
அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கு நாளையதினம் மர கூட்டம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த மரமானது பல்லாண்டு காலமாக பாடசாலை வளாகத்தில் நிற்கின்றது. மரத்தின் கொப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் குறித்த கொப்புகளை வெட்டலாம் ஆனால் மரத்தினை வெட்ட வேண்டிய தேவை இல்லை.
பயணிகளது நன்மை கருதி வீதிகளில் உள்ள மரங்களையே வெட்டாமல் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பாடசாலை வளாகத்திற்குள் நிற்கின்ற மரத்தை வெட்டுவதற்கான தேவை என்ன?
குறித்த மரம் நிற்கின்றதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மரநிழலில் நிற்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் ஒட்சிசனை பெறுவதற்கும், வெப்பநிலையை சீர் செய்வதற்கும் குறித்த மரம் அளப்பரிய பங்காற்றுகின்றது.
குறித்த மரத்தினை வெட்டுவதால், பாடசாலையில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாதிப்புகள் உள்ளன.
அவர்களது உடல் ஆரோக்கியமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.
மரங்களை நாட்டவேண்டுமென்ற எண்ணக்கரு மாணவர்களிடத்திலே விதைக்கப்பட்டு வரும் நிலையில், அனைவருக்கும் நன்மை பயக்கும் இந்த மரத்தினை வெட்டுவது நியாயமா? இதனால் மரக் கூட்டுத்தாபனத்துக்கு என்ன இலாபம் இருக்கின்றது?
எனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதிக்கான கிராம சேவகர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தி , நாளையதினம் (09) இந்த மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்றனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








