மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவரும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வைத்தியசாலை தரப்பினரின் கவனக் குறைவு காரணமாகவே குறித்த பெண்ணும் சிசுவும் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலையில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை வெளிப்படுத்தப்படும் வரையில் அவரது உடலைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இது தொடர்பில் தெரிவிக்கும் போது பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் எனவும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.








