வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுவதுடன், புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்
அதிகரித்து வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் அந்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், பின்னர் அந்த கடல் பகுதிகள் சிறிது நேரத்திற்கு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.








