தவறு செய்தவர்கள் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஒருவரின் தரம் அல்லது அந்தஸ்து எதுவாக இருந்தாலும், அவர்கள் ஒரு குற்றத்தை செய்தால், அவர்கள் தகுந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஸ்திரப்படுத்துவதற்கும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
மக்களின் நம்பிக்கையை உடைக்கவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“எந்தக் காரணத்திற்காகவும் குற்றம் செய்யும் எந்தவொரு நபரையும் பாதுகாக்க எங்கள் அரசாங்கம் தயாராக இல்லை. நாட்டில் மட்டுமின்றி, அரசாங்கத்துக்குள்ளும், யாரேனும் ஒருவர் தவறு செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான நேரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயங்க மாட்டோம்” என்று எச்சரித்தார்.
அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும், தேசத்தை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் நிபந்தனையின்றி செயற்படும் என ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.







