கௌதாரி முனையில் மண் அகழ்வுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கௌதாரி முனை ஒரு முக்கியமான பிரதேசம். அந்த இடம் சம்பந்தமாக உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். அதனை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அனுமதி கொடுக்கப்பட வேண்டாம் என்பது இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம். இந்த முடிவுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் – என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா, இன்று தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது என்பதற்காக இதற்கு முந்தைய நாளான 24ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி கொடுக்கப்பட்டது போல திகதியிட்டும் அனுமதி கொடுக்கப்பட கூடாது என்றார்.
(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்)







