இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு இரத்தினக்கல் வர்த்தகரின் வீட்டில் 2.5 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்து தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைக் குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி அதிகாலை வேனில் வந்த குற்றக் கும்பல் இரத்தினக் கல்லை விற்பனை செய்ய வந்ததாகக்கூறி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். பின்னர் வீட்டில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் தாக்கி 2.5 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களையே குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எஹெலியகொட, குருவிட்ட மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (15/02/2025) இரத்தினபுரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு சந்தேக நபர் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்பதால், நாளை திங்கட்கிழமை (17/02/2025) வரை தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலும் விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








