இன்று உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் கொண்டாடப்படும் பொசன் தினமாகும். வெசாக் தினத்தையடுத்து வருவதே பொசன் தினமாகும். இலங்கைக்கு சங்கமித்தை வௌ்ளரச மரக்கிளையுடன் வருகைத் தந்த தினமே பொசன் தினமாக கொண்டாடப்படுகிறது.
நேபாளத்தின் லும்பினி என்னும் இடத்தில் அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்த சித்தார்த்தர் அவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்தமைக்கமைவாக இருபத்தொன்பதாவது வயதில் துறவறம் பூண்டார். புத்தகயாவில் தியானத்தில் ஈடுபட்ட அவர் ஞானம் பெற்று புத்தரானார்.
அரச மரத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் இடையில் நெருக்கமான உறவும் ஆரம்பமானது. ஞானம் பெற்ற சித்தார்த்தர் பௌத்த மதம் குறித்து பல இடங்களை போதிக்க ஆரம்பித்தார். அவ்வாறு அவர் போதித்த போது வாசனாரி என்னுமிடத்தில் ஐந்து சீடர்களை தெரிவு செய்து பௌத்த மத கோட்பாடுகளை விளக்கி பௌத்த சமயத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான வித்தையிட்டார்.
கருணை நிறைந்த, ஆசை துறந்த வாழ்வே அமைதிக்கு வாழ்வுக்கு நிம்மதியை தரும் என்ற புத்த பெருமானின் போதனையை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பௌத்த மதத்தை தழுவினர். அசோக சக்கரவர்த்தியின் குடும்பம் முழுவதும் பௌத்த சமயத்தை தழுவிக்கொள்ள துறவறம் பூண்ட அவருடைய மகள் சங்கமித்தை தனது சகோதரன் துணையுடன் இலங்கைக்கு வௌ்ளரச மரக்கிளையுடன் பாதம் பதித்தார். அதுவே இலங்கையில் பௌத்த சமயத்தின் ஆரம்பம்.
பௌத்த சமயத்தின் அடையாளமாக இன்று பாரிய விருட்சமாக வளர்ந்துள்ள சங்கமித்தை கொண்டு வந்த வௌ்ளரசு மரக்கிளை அநுராதபுரத்தின் மகாமேகவண்ண பூங்காவில் நடப்பட்டுள்ளது.
மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது. பிக்குனியான சங்கமித்தை கொண்டு வந்த அம்மரக்கிளையை தேவ நம்பிய தீசன் நட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.