தரம் 8 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, ஹொரண ரெமுண பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், களுத்துறை, தியகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சிறுமி, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வருவதாகவும், வீட்டின் வறுமை காரணமாக, பணம் மற்றும் பிற பொருட்களை கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தனியார் பேரூந்து நடத்துனர் சிறுமியை ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அதன்படி, கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமித் ஜயதிலக மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், ஹொரண ரெமுன பிரதேசத்தில் உள்ள நடத்துனரின் வீட்டில் இருந்து குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் சிறுமியிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் நடத்துனர் சிறுமியை கடத்திச் செல்வதற்கு முன்னர் பல வருடங்களாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
பிரதேசத்திலும், வீட்டிற்கு அருகாமையிலும் உள்ள விடுதிகளில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறுமி தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








