உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (03.05.2025) மு.ப 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து 05.05.2025 திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடன் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து ஒழுங்குகள், முறைப்பாடுகளுக்கான உடனடி நடவடிக்கைகள், வட்டாரங்களில் இடம் பெறும் வாக்கெண்ணலின் போதான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாவட்டச் செயலகத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற ஆசனங்களை அறிவிக்கும் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுதந்தரமாகவும், சுமூகமாக நடைபெற்றதாகவும் இதற்கு வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய ஒத்துழைப்பு காத்திரமானது எனவும், அதற்காக தமது நன்றியினை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here