எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள கல்வி முறைமையின் ஊடாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே, தற்போது முழுமையான கல்வி மறுசீரமைப்பு அவசியமாகவுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கருத்துரைக்கின்ற போதும் பலரும் பாடங்கள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர்.

எனினும் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பல சந்தர்ப்பங்களில் உயர்கல்வி முறைமை தொடர்பில் மாத்திரமே கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் தற்போது பாடசாலை கல்வியில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.

இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான மனித வளம் உள்ளது அதனை உரிய முறையில் பயன்படுத்திச் சிறந்த கல்வியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதேநேரம், பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கூறப்படுகின்ற நிலையில் மறுபுறம் மிகவும் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளும் இயங்குகின்றன.

இதன்படி, 10 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையை கொண்ட 115 பாடசாலைகள் நாட்டில் இயங்குவதாகவும் 20க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்ட 406 பாடசாலைகள் இயங்குவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மாணவர்கள் தங்களது சமூகத்திலிருந்து வெளியேறி முன்னோக்கி பயணிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here