சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 45 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (25) வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 41,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரொருவர் என்பதுடன், இவர் தனது உறவினரொருவரை சந்திப்பதற்காகத் துபாய்க்குச் சென்று மீண்டும் நாடு திரும்பும் போது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேக நபர், கொழும்பு தலவத்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவர் என்பதுடன், இவர் துபாய்க்குச் சென்று மீண்டும் நாடு திரும்பும் போது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கும் எச்சரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்துள்ளனர்.







