சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நேற்று (27) பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டாருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்கள் குறித்து சீன வெளியுறவுத்துறையமைச்சரிடம் பாகிஸ்தான் துணைப்பிரதமர் விளக்கினார்.
தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்தும் உறுதியாகவும் போராடி வருவதாகவும், நிலைமை மோசமடைய வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராக இருப்பதாகவும் டார் வலியுறுத்தினார்.இதேவேளை சீனா மற்றும் சர்வதேச சமூகத்துடன் பாகிஸ்தான் தொடர்பைப் பேணும் என்று டார் மேலும் கூறினார்.
சீனா இந்த முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது முழு உலகத்தின் பகிரப்பட்ட பொறுப்பு என்றும், பாகிஸ்தானின் உறுதியான தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு சீனாவின் நிலையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் வாங் கூறினார்.








