அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே அவர்களின் தடுப்பை மேலும் நீடிக்க வேண்டாம் என கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நேற்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், தனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி, நாட்டிற்காக தனது இளமைக்காலத்தையும், குடும்பத்துடன் கழிக்கக்கூடிய பெறுமதியான வருடங்களையும் அர்ப்பணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயது முதிர்ந்த தாய் என்ற வகையில் தனது மகன் தடுப்பு உத்தரவின் கீழ் இருப்பதை பார்ப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், விசாரணைகளை நிறுத்துமாறு தான் கோரவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை விசாரித்து, ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஆராய்ந்து உண்மையை கண்டறியுமாறும் அவர் கோரியுள்ளார்.
எனினும் விசாரணைகள் நடைபெறும் வரை தனது மகனின் தடுப்பை மேலும் நீடிக்க வேண்டாம் என தாய் என்ற வகையில் கருணையுடன் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற வேண்டும், தடுப்பு என்பது ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியை சந்திக்க தனக்கு வாய்ப்பு வழங்குமாறும் சுரேஷ் சலேவின் தாய் கோரியுள்ளார். தனக்கு சிறப்பு சலுகை அல்ல, நீதி, மனிதாபிமானம் மற்றும் நியாயமான வாய்ப்பு மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, தனது மகனுக்கு சுதந்திரமாக சட்டத்திற்கு முன் முகம் கொடுக்க வாய்ப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளார் என சில முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








