சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் வியாழக்கிழமைக்குள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சேவைகளை மீட்டெடுப்பதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் அயராது உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, 11 இடங்களில் மாகாண ஃபைபர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அமைச்சின் நேரடித் தலையீட்டின் மூலம், இவற்றில் 9 இணைப்புகளை 24 மணி நேரத்திற்குள் மீட்டெடுக்க முடிந்தது.
தற்போது, அனைத்து மாகாண இணைப்புகளும் செயற்பாட்டில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட மின்தடை மற்றும் ஃபைபர் துண்டிப்புகளால் 4,000 இற்கும் அதிகமான முக்கியப் பரப்புகை (transmission) கோபுரங்கள் செயலிழந்தன.
இவற்றில் சுமார் 2,800 தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 949 கோபுரங்கள் முதன்மையாக மின்தடை காரணமாக செயலிழந்துள்ளன.
அவற்றின் செயற்பாட்டை கூடிய விரைவில் மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.
முப்படைகள் தொலைத்தொடர்பு கோபுரங்களை விரைவாக அடைவதற்கும் தேவையான மின் ஆதரவை வழங்குவதற்கும் அதிகபட்ச உதவியை வழங்குகின்றன.
தற்போது, நுவரெலியா, பதுளை, புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பிரதானமாகச் சிக்கல்கள் நீடிக்கின்றன.
இவற்றுள் நுவரெலியா மற்றும் கண்டி ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
நாளைக் காலைக்குள், நுவரெலியா மற்றும் புத்தளத்தில் 75% இற்கும் அதிகமான இணைப்பு மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல், கண்டியில் தற்போதைய 65% இலிருந்து சுமார் 70% ஆக மீட்டெடுப்பை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்.
பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ளவும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பைப் பேணவும் தொடர்பு அத்தியாவசியமானது.
ஏற்கனவே 80% இற்கும் அதிகமான தடைகளைத் தீர்த்துவிட்டோம், நாளை மறுதினத்துக்குள் முழுமையான மீட்டெடுப்பை அடைய முடியும் என்று தாம் நம்புவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.








