“மீண்டும் ஊருக்கு போகலாம்” என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மாபெரும் நெடுவூர் திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் இடம்பெறும் என நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன ஏற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

நெடும் தீவானது சுமார் 15 ஆயிரம் மக்கள் வாழ்ந்த பிரதேசம் நேற்று அங்கு வாழும் மக்கள் தொகை மிகக்  குறைவடைந்துள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் வளப்பற்றாக்குறை ஏனைய வசதி வாய்ப்புகள் இல்லாமை காரணமாக இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் வேறு பிரதேசங்களுக்கும் சென்றுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு மண்ணையும் மக்களையும் பாதுகாத்து நிலைபேறான அபிவிருத்தியை நெடுந்தீவில் ஏற்படுத்தும் பொருட்டு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் மாபெரும் நெடுவூர் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவைப்  பிறப்பிடமாகக் கொண்ட புலம்பெயர் நாட்டில் வசிக்கும் மக்கள் பங்காளிப்புடன் நெடுந்தீவு மக்களும் இணைந்து அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் நெடுவூர் திருவிழாவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இந்த காலப்பகுதியில் விவசாய கண்காட்சி மூலிகை கண்காட்சி, கல்வி சார்ந்த காட்சி , உள்ளூர் உற்பத்தி, பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு கொண்டாட்டங்கள், புத்தக வெளியீடு உட்கட்டுமான் அபிவிருத்தி தொடர்பான தளங்களைப் பார்வையிடல், சுற்றுச்சூழல் கண்காட்சிகள், முத்தமிழ் கலை நிகழ்வுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுகதை கட்டுரை கவிதை போட்டிகள் பரிசளிப்பு என்பன இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கடல் பயணத்திற்கான படகு சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இலங்கையின் முதல் கிராம சேவையாளர் பிரிவான நெடுந்தீவில் இருந்து  நிலைபேறான அபிவிருத்தியை ஏனைய பகுதிகளுக்கும் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து ஆதரவு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here