இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதையடுத்து இடைநிறுத்தப்பட்ட இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைப்பதற்கான பணியில் அந்தந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயிற்சியில் சுப்மன் கில், மொஹமட் சிராஜ், ககிசோ ரபாடா உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை நிறைவடைந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.








