தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல, வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அத்தனகலு மற்றும் உறுவல் ஓயா ஆகிய இருபுறங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர குறிப்பிட்டார்.

“இதுவரை பெய்த மழையின் அடிப்படையில், கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் ஆற்றின் படுகை மிகவும் ஈரப்பததத்துடன் உள்ளது.எனவே அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயா நீரோடைகளில் இன்று கணிசமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால், ஆற்றுப் படுகை இலகுவாக குறிப்பிடத்தக்க உயர் வெள்ள நிலைமையாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, களுகங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் மில்லகந்த பிரதேசத்தில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக சுகீஸ்வர குறிப்பிட்டார்.

அத்துடன், பத்தேகம பிரதேசத்தில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here