புது வருடப்பிறப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன. புத்தாண்டுக்கான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் அதிகளவில் நாட்டம் காட்டும் நிலையில், சந்தையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி நிலவுகிறது.

அவற்றுள் அரிசி தட்டுப்பாடு முதன்மையான பிரச்சினையாக மாறியுள்ளது. அதன்படி பல மாதங்களாகச் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார்த் துறையினரால் நேற்று வரையில் 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி இறக்குமதிக்கான ஒதுக்கீடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அரிசித் தொகையில், 32,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 43 ஆயிரம் மெற்றிக் டன் நாடு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், அரசாங்கம் இறக்குமதி செய்யவிருந்த 5,200 மெற்றிக் டன் அரிசித் தொகை கடந்த 16 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என கூறப்பட்ட போதிலும் அது கடந்த 24 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.

இந்தநிலையில், குறித்த அரிசித் தொகை நேற்று வரையில் நாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

இதேவேளை சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபாய் வரையிலும், ஏனைய மரக்கறிகள் கிலோவொன்றின் 500 முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒரு கிலோ கிராம் பீர்க்கங்காய் 180 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 350 ரூபாவிற்கும், தக்காளி 250 ரூபாவிற்கும், பாகற்காய் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here