யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு எகிப்திலிருந்து போட்டியிடும் (கலாநிதி) காலித் எல். எனெனி இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியை அண்மையில் (05) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கும், எகிப்துக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, பரஸ்பர இரு தரப்பு உறவுகள் இச்சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிடும் நபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நோக்கத்தை வெளிப்படுத்திய கலாநிதி காலித் எல். எனெனி, நாடுகளிடையே கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் எகிப்துடன் காணப்படும் நீண்டகால உறவுகள் குறித்து பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.








