ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத அணியாக சம்பியனான இலங்கை அணியினர் இன்று காலை நாடு திரும்பினர்.
12 அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் டி குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் ஓமானை 4 விக்கெட்களாலும் பங்களாதேஷை 18 ஓட்டங்களாலும் இலங்கை வெற்றிகொண்டது.
லீக் சுற்றில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறிய நேபாளத்தை 3ஆவது கால் இறுதியில் எதிர்கொண்ட இலங்கை 40 ஓட்டங்களால் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை ஒரு பந்து மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்த இலங்கை 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.
ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை சம்பியனானது இது இரண்டாவது தடவையாகும்.








