லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
லங்கா நிலக்கரி நிறுவனத்தினால் இன்று (13) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அதன் தலைவர் ஜெயந்த இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஓர் ஒலிப்பதிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த ஒலிப்பதிவில், அவருக்கும், நிறுவனத்தின் பொது முகாமையாளருக்கும், நிலக்கரி விநியோக நிறுவனத்தின் உள்ளூர் முகவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அதிகாரிக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 25, 2026 அன்று நடைபெற்ற அந்த உரையாடல், குறிப்பாக சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்படுவதற்கு முன்பு “பல்வேறு வழிகளில் திரிக்கப்பட்டுள்ளது”.
அந்த அறிக்கையின்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட டெண்டர் செயல்முறை மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோக நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதியிடம், அதே திகதியில் ஒரு வங்கியால் வழங்கப்பட்ட செயல்திறன் பிணைப்பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையே அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது.
எனினும் அவசரகால நிலக்கரி விநியோகத்திற்காக, உரிய டெண்டர் சபையின் மூலம் முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி, அந்த விநியோக நிறுவனம் முறையாகத் தகுதி பெற்று, ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஜெயந்த சுட்டிக்காட்டினார்.
மேலும், அவசரகால நிலக்கரி விநியோகம் தொடர்பான அனைத்து கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளும் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் “தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களால்” பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட கூடாது எனத் தலைவர் கேட்டுக்கொண்டார்.








