இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது.
இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய படியை எடுத்து வைத்துள்ளது.
இந்த அறிவிப்பு நிகழ்வில், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சர்வதேச டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் இந்த பேபால் சேவை கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் பேசிய கொமர்ஷல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சனத் மனதுங்க, இலங்கையில் டிஜிட்டல் வர்த்தகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு கூட்டு முயற்சியை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்காலம் என்பது நாம் வெறுமனே காத்திருக்கும் ஒன்றல்ல, அது நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டிய ஒன்று,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் இணையத்தில் கொள்வனவு செய்வதற்கோ அல்லது எவருக்கும் பணப்பரிமாற்றம் செய்வதற்கோ பேபால் கணக்குகள் பயன்படுகின்றன. வங்கி விபரங்களை விற்பனையாளர்களுக்கு அல்லது பணம் பெறுபவருக்கு வழங்காது பணம் செலுத்த முடியும் என்பது இதில் விசேட அம்சமாகும்.
பேபால் சேவைகளின் அறிமுகம், இலங்கை பயனர்களுக்கு, குறிப்பாக சுயதொழில் செய்பவர்கள், தொழில்முனைவோர் மற்றும் இணைய வணிகங்களை நடத்துவோருக்கு, சர்வதேச இணையவழிப் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








