2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமைச்சு இந்த முடிவை அறிவித்துள்ளது.
‘தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைய, உயர்தர பாடத்திட்டத்தை முழுமையாக கற்பிக்க 300 பாடசாலை நாட்கள் அவசியமாகும்,
2026 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல் ஆரம்பித்த நாள் முதல் ஒகஸ்ட் 7, 2026 வரை 343 பாடசாலை நாட்கள் கிடைத்துள்ளன’ என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் இரண்டாம், மூன்றாம் தடவையாக பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகளுக்கு, முந்தைய பரீட்சை பெறுபேறு வெளியானதில் இருந்து எதிர்வரும் பரீட்சை வரை 4 மாதங்கள் 10 நாட்கள் இடைவெளி காணப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பரீட்சைக்கு தயாராவதற்கு போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சை திகதியை திருத்தவோ ஒத்திவைக்கவோ எந்த தேவையும் இல்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








