தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது.
இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும் அரச பஸ்களுக்கும், குறுகிய தூர, நீண்ட தூர மற்றும் சொகுசு சேவைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன, குறுகிய தூர பஸ் கட்டணம் கணக்கிடப்படும் முறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட முறைக்கு பதிலாக தூர அடிப்படையிலான கணக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீண்ட தூர கட்டணம் சராசரி அடிப்படையில் கணக்கிடப்படுவதால் குறுகிய தூர கட்டணத்தில் முரண்பாடுகள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் டீசல் விலை குறைந்தாலும், தற்போதைய கணக்கீட்டு முறையின் கீழ் குறுகிய தூர கட்டணம் குறையாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தப்பட்ட கட்டண அட்டவணையை ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், அது திட்டமிட்டபடி நாளை முதல் அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்ற காலப்பகுதியில் பயணிகள் ஒத்துழைக்குமாறும், கட்டண முறையை மீளாய்வு செய்யுமாறும் விஜேரத்ன கேட்டுக் கொண்டுள்ளார்.







