
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக. தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (06) அதிகாலை உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா 351 தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை ஏவி பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையால், ரஷ்யா ஏவிய 23 நீண்டதூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வான் பாதுகாப்பிற்கான ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைகளின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
இருப்பிடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி மீண்டும் சர்வதேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம் உக்ரைனின் இராணுவ மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தே இந்த ‘பாரிய’ தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்களை அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளின் உலகளாவிய தட்டுப்பாடு உக்ரைனின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







