நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மேலதிக சிகிச்சைகள், அவசரத் தேவைகள் மற்றும் ஏனைய உதவிச் சேவைகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகம், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடி உள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த 29 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 சிறைச்சாலை அதிகாரிகளும், 14 கைதிகளும் உள்ளடங்குகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





