வெல்லவாய-மொனராகலை வீதியில் கும்புக்கன பகுதியில் இன்று அதிகாலை (21) டிப்பர் வண்டி ஒன்றும் 10 பேருடன் சென்ற டிரக்டர் ஒன்றும் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களு பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெல்லவாய நோக்கி சென்ற டிப்பர் வண்டி, எதிர் திசையில் வந்த டிரக்டர் மற்றும் டிரெய்லருடன் மோதியுள்ளது.
டிரெய்லரில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். ஏனைய 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தளை மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்பர் வண்டி மற்றும் டிரக்டரின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








