யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர்  தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு தயாரிப்பு நிலையங்கள் ஐந்து இனங்காணப்பட்டன. அவற்றுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தொடரப்பட்டபோது இந்நிலையங்களின் ஐந்து உரிமையாளர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட உணவு தயாரிப்பு  நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலையங்களுக்கு எதிராகவும் கடந்த  வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்போது அந்நிலையங்களின் 04 உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு மன்றினால் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத உணவக உரிமையாளர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் சமுகமளிக்குமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here