அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய அலுவலர்கள் தகாத செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவ ராஜா மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள்,நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

தாபன விதிக்கோவையின் அத்தியாயம் ‘XXXII’ இன் பிரிவின் 2 இன் கீழ் அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்களான மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களில் ஒரு பகுதியினர் பாராளுமன்ற தேர்தல் -2024 தொடர்பாக சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

குறிப்பாக தமது கடமை நேரங்களில் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுதல்,தமது கடமை பரப்பெல்லை க்கு உட்பட்ட அலுவலகங்களிலும், கடமையாற்றும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமது சேவை நாடிகளான பொது மக்களிடம் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.

இவ்வாறான கருமங்களில் ஈடுபடும் அலுவலர் ஒருவர் 1981 ஆம் ஆண்டு  1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின்  80 (ஆ) உறுப்புரையின் கீழ் தவறொன்றை இழைத்தவராக கருதப்படுவார்.

அலுவலர் ஒருவரின் பதவி வழியாக கடமை அதிகார எல்லை பிரதேசத்தில் அவரால் அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவது இவ்வாறான தவறொன்றாக அமையும் என்பது தொடர்பாக தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவூட்டும் படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

சுயாதீனம்  நடுநிலை மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தங்கள் ஒத்துழைப்பினை மிகவும் மதிக்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here