இத்தாலியில் வேலைவாய்ப்பு தேடும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நம்புவதாக இலங்கைக்கான இத்தாலிய தூதர் டாமியானோ பிரான்கோவிக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதர் டாமியானோ பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது, இதன்போது இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் இத்தாலிய தூதர் தெரிவித்தார்.
இலங்கையின் சுற்றுலா, துறைமுகம் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் வழங்கும் சாத்தியமான ஆதரவு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும், இத்தாலியில் வேலை தேடும் இலங்கையர்களுக்கும் சட்டப்பூர்வ வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்காக தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் ஆதரிப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர் ரோஷன் கமகேவும் இந்த நிகழ்வில் இணைந்தார்.








