முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு திடீரென சென்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கண்டனம் வெளியிட்டுள்ளது.
விக்ரமசிங்க தற்போது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, இந்த நடவடிக்கையால் கட்சி வருத்தம் அடைவதாகக் கூறியுள்ளார்.
அவர் குணமடைந்து வரும் காலத்தில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்க கவனித்து வருவதாகவும், அவரது உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல் சந்திப்புகளும் தவிர்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவும் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீரென இல்லத்திற்கு வருவது பொருத்தமானதா என்று கேள்வி எழுப்பிய அவர், இத்தகைய நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டார் என்பதை அறிய கட்சி விரும்புவதாகத் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கவலைகள் இருப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
இத்தகைய முறையில் வாக்குமூலம் பெறுவதை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், குறிப்பாக அந்த இல்லத்தில் வசிப்பவர்கள் இருவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வேளையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் துறை (CID) சென்று, பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.








