ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதிப் போட்டி நானுஓயா ரதல்ல தேயிலை மலையில் 01.03.2025 அன்று நடைபெற்றது.
ஹொரண, தலவாக்கலை மற்றும் கெளனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள 60 தோட்டங்களில் ஆரம்பகட்ட போட்டிகள் நடைபெற்று, அவற்றில் வெற்றி பெற்றவர்களில் இருந்து 50 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

20 நிமிடங்களில் அதிகமாக கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் தலவாக்கலை, பெருந்தோட்ட நிறுவனத்தின் ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடத்தை பெற்றார். அவர் மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார். அவரின் கணவர் கொழும்பில் பணிபுரிகின்றார் என்பதோடு, 18 வருடங்கள் இந்த பெருந்தோட்டத்துறையில் பணியாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் 15 நிமிடங்களுக்குள் 08 கிலோ கொழுந்தை பறித்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்றதனால் 650,000 லட்சம் ரூபா பணப்பரிசும் தங்கப்பதக்கமும், தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொகான் பண்டித்தகே, நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ரொஷான் ராஜதுரை உட்பட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








