அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களில் சிறு போகம் செய்யவதற்குரிய ஆரம்ப வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில் இருந்து வருகை தரும் இந்த காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பாதுகாக்க அறுவடை காலங்களில் இரவு வேளைகளில் வயல் நிலங்களுக்குள் உட்புகுந்து விளைந்த வயல்நிலத்தை துவம்சம் செய்ததால் தமது இவ்வருடத்தின் வாழ்வாதாரத் தொழில் இன்னும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், நெற்பயிரை இரவு வேளையில் யானைகளின் அழிவுகளிலிருந்து தாம் பாதுகாத்தாலும் அறுவடை ஆரம்பத்தில் இக் காட்டு யானைகள் கூட்டம் வருகை தந்ததால் கடந்த பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் சில வயற் கண்டங்களில் அறுவடை மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி கவலை வெளியிடுகின்றனர்.

ஏற்கனவே வெள்ளத்தில் அள்ளுண்டு போனதில் எஞ்சியுள்ள நெற்பயிரை இரவு பகலாக கண் விழித்திருந்து அறுவடை செய்ய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவடை முடிந்த பின்னும் தமது கிராமங்களுக்குள் இக்காட்டுயானைகள் உட்புகாமல் இருப்பதற்கு தொடர்ந்தும் தாம் காவல் செய்வதாகவும், சிறுபோக வேளாண்மை பயிர்ச்செய்கைக்குரிய காலம் ஆரம்பித்தாலும் நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் வயல் வெளிகளில் தொடர்ந்து தரித்து பட்டியாக நிற்பதனால் தாம் சிறு போகம் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என அப்பகுதி விவசாயிகள் அச்சம் வெளியிடுகின்றனர்.

மிகநீண்ட காலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன், யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருப்பதற்காக யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறு அப்குதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அது இதுவரையில் நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here