மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போஷாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் ‘பெலெஸ்ஸ’ உணவகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டமானது க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் 200 ரூபாய் விலையில் போஷாக்கு நிறைந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்குக் கிடைக்குமெனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த போஷாக்கு நிறைந்த உணவு முறைமை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போஷாக்கான சிற்றுண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தநிகழ்வில் கலந்து கொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.

அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்துடன் இணைந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here