சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பெட்மின்டன் வீரர் நிலூக்க கருணாரட்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் நகரிலிருந்து கருத்து தெரிவித்த அவர் ‘விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதல் நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமையடைகிறேன். இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலூக்க கருணாரட்ன 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பெட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன் 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் (2012, 2016, 2020) பங்குபற்றியவரும் ஆவார். அத்துடன் பல்வேறு சர்வதேச பெட்மின்டன் போட்டிகளில் வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.
மேலும் குறித்த குழுவில் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சம்பியன் அலிசன் பீலிக்ஸ், ஜேர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கிம் பியூ, அவுஸ்ரேலியாவின் படகோட்ட வீராங்கனனை ஜெசிக்கா பொக்ஸ், நியூஸிலாந்தின் டென்னிஸ் வீரர் மார்க்கஸ் டெனியல் ஆகியோர் முக்கிய நான்கு உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். இக் குழுவில் மொத்தமாக 29 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







