தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையிலும் போர் நிறுத்தம் இன்னும் அமுலாகவில்லை.
இன்றைய தினத்திற்கு (24) பிற்போடப்பட்ட நிலையிலும் காசாவில் நேற்றும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களையும் போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
பணயக்கைதிகளின் விடுதலையுடன் இணைந்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிய நிலையிலும், அது இன்று (24) வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை கடந்த புதன்கிழமை (22) காலையில் அறிவிக்கப்பட்டபோதும், ஒருநாள் கடந்துள்ள நிலையிலும் போர் நிறுத்தம் ஆரம்பமாகும் உத்தியோகபூர் நேரம் வெளியிடப்படவில்லை.
இந்த 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்காக கட்டார் மத்தியஸ்தம் வகித்து வருகிறது.
போர் நிறுத்தத்திற்கான நேரம் சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என்று நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் காசா மீது 300 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருந்தது.
மேலும், பலஸ்தீன போராளிகளால் ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் காசாவை ஒட்டிய இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் சைரன் ஒலியும் எழுப்பப்பட்டது.
ஏழு வாரங்கள் நீடிக்கும் இந்தப் போரின் முதல் போர் நிறுத்த உடன்படிக்கையின்படி காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் 50 பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்படவிருப்பதோடு அதற்கு பதிலாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 150 பலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
![]()