அடி நிலையிலுள்ள மக்களுக்கு அறிவையூட்டுகின்ற ஒரு சந்தர்ப்பமாகவே இவ்வாறான சர்வதேச நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றோம் என அபிவிருத்திச் செயல் திட்டங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்”  எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த இந்நிகழ்வு சேருநுவர பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சமூர்த்தித் திட்ட முகாமையாளர் ரீ. ரவீந்திரன் தலைமையில் வியாழன் அன்று  26.03.2025 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சேருநுவர பொலிஸ், பெண்கள் சிறுவர் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.ஜீ. தனுஜா, வளவாளரும் பொலிஸ் கான்ஸ்டபிளுமான டி.ஜீ. நிமேஷா சந்தருவானி ரத்னசூரிய, பொலிஸ் சார்ஜன்ற் ஏ. பிரசன்னா பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி அலுவலரும் மொழி பெயர்ப்பாளருமான ஐ.எம்.எஸ். றிஷானாபானு, பிரதேச செயலக அதிகாரிகள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப்பணியாளர்கள் உட்பட  பிரதேச மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள் சிறுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம், வீ எபெக்ற் நிறுவனங்களும் அனுசரணை வழங்கியிருந்தன.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்  திலீப்குமார், அடி நிலையிலுள்ள மக்களுக்கு அனைத்து வகையான விழிப்புணர்வுகளும் ஊட்டப்படுகின்றன. அதற்கென அரசாங்க அலுவலர்களும் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் பணிகளை கவனமா, கண்ணியமாக, கரிசனையாகச் செய்கின்றபோது அதன் விளைவுகள் வெளிவரத் துவங்கும். அதுவே அபிவிருத்தியின் தொடக்கமாக இருக்கும். இன்றைய நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட மகளிர் சிறுவர் பொலிஸ் பிரிவு உத்தியொகத்தர் நிமேஷா சந்தருவான, பெண்கள் சிறுவர்களுக்கான விழிப்பூட்டலை மிகச் சிறப்பாகத் தயார்படுத்தி, எளிதான வழிகளில் நடித்து, நகைச்சுவை கலந்து, ஆடிப்பாடி அசத்தியிருக்கிறார். இலகுவில் எளிய முறையில் புரிந்து கொள்ள வைத்திருக்கிறார். இத்தகைய ஆற்றல்கள் பாராட்டத்தக்கவை.

அவரது ஆற்றல்கள் தேடல் மிக்கவை. சிறப்பானவை தானும் கற்றுக் கொண்டு மற்றவர்களும் கற்றுக் கொள்ள வைத்திருக்கிறார். குறிப்பிட்ட நேரத்திற்குள் கூடிய விடயப்பரப்பை ஆற்றலோடு செய்து முடித்திருக்கின்றார். அறிவாற்றலுள்ள இவரைப் போன்றவர்கள் இந்த சமுதாயத்திற்குத் குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்திற்குத்  தேவை. இப்படிப்பட்ட பன்முக ஆற்றல் சமுதாய மாற்றத்தில் ஒரு மைல் கல் என்றே கொள்ள வேண்டும்.” என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராமிய மகளிர் மற்றும் அலுவலர்களைப் பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here