நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீற்றருக்கும் மேல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வெப்பமான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்.
இதேநேரம் கொழும்பு மற்றும் காலி வழியாக சிலாபத்திலிருந்து மாத்தறை வரையான கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யும். காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசும்.
அத்துடன் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையும், கல்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கலாம்.
மேலும் முல்லைத்தீவு – திருகோணமலை மற்றும் கல்பிட்டி – காலி – அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்று மணிக்கு 50 கி.மீ வரை வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகத்தினால் அம்பாந்தோட்டை – பொத்துவில் மற்றும் கல்பிட்டி – முல்லைத்தீவு வரையான கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், முல்லைத்தீவு – திருகோணமலை மற்றும் கல்பிட்டி – அம்பாந்தோட்டை வரையான கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலையின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கலாம்.
எனவே கொந்தளிப்பான கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








