சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” அண்மையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(07) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவனாகக் கருதப்படும் ‘மன்னா ரமேஷ்’ எனப்படும் ரமேஷ் பிரியஜனக என்பவரே இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கப்பம் பெறுதல், கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் மன்னா ரமேஷ் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அண்மைக்காலமாக சில கொலைகள் இவரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரான மன்னா ரமேஷை இன்று காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here